விண்ணளந்த சிறகு - வாசிப்பு அனுபவம்
சிறு மாற்றத்துக்காக வெண்முரசில் இருந்து கொண்டு மூச்சு வாங்குவதற்க்காக கையில் எடுத்த புத்தகம் " விண்ணளந்த சிறகு " . இயற்கை சார்ந்த சிறிய புத்தகம் ஆனால் மிகப்பெரிய உலகை காட்டும் விரிவான புத்தகம். நாற்பது ஆண்டுகள் தேடல் கொண்ட, நூற்றி பதினைந்து பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகம் . இயற்க்கை விரும்பிகள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் .
நாடு என்பது மக்களால் மட்டும் ஆனது அல்ல , அதில் ஓடும் ஆறுகள் , மலைகள் ,ஓடைகள் ,காடுகள் ,அங்கு வளரும் தாவரங்கள் ,காட்டுயிர்கள் , சிற்றுயிர்கள் , இவை அனைத்துமே ஒரு நாட்டின் முழு பரிணாமம் . ஓடி ஓடி பொருள் சேகரிக்கும் அவசரத்தில் இதையெல்லாம் மறந்து இருப்பது மனிதர்களின் அறிவின்மை .
பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ போல் , " நிஸகாந்தி " என்ற ஒரு பூச்செடி வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே, அதுவும் இரவில் இரண்டு மணி நேரம் மட்டும் பூப்பதாகவும் , புத்தபூர்ணிமா நாளில் பூப்பது , என என்னை வியப்பில் ஆழ்த்தியது அதன் தகவல்கள் . இந்த செடியை எழுத்தாளர் தன் வீட்டீலேயே வளர்த்து பார்த்து இயற்கையின் பூரண தரிசனத்தை அனுபவித்துள்ளார் .
தொதுவர் பழங்குடி இன மக்களின் நலனுக்காக போராடிய பில்ஜின் என்பவரின் போராட்டம் போற்றுதலுக்குரியது , ஆதரவற்ற ஒன்பது தொதுவர் இன குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார் அவர்களில் ஒருவர் ' சோலைகிளி' என்ற படத்தில் நடித்த ராகினி , அவர் நடிகர் கார்த்திக்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவர்களின் புதல்வன் தற்போதைய இளம் நடிகர் " கௌதம் கார்த்திக் " .என்ற செய்தியும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது .
உலகில் முப்பத்தி ஐந்து மனிதர்களுக்கு ஒரு நாய் என்ற விகிதத்தில் நாய்களின் பெருக்கத்தால் மற்ற விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் என்ன என்பதை வாசிக்கும் பொது திடுக்கிடுகிறது .
இதில் உள்ள 35 கட்டுரைகளும் மிக முக்கியமானவை கூறியவை , கட்டுரை என்பதை தாண்டி நாவல் தன்மை கொண்டவை . மிகுந்த வருத்தம் தர கூடிய செய்திகள் அதிகம் இருந்தாலும் நம் மனதை வருடக்கூடிய தகவல்கள் சிலிர்க்க வைக்கின்றன .உலகம் மனிதர்களுக்கானது மட்டும் அல்ல , வயது முதிர்ந்த மரத்தை வெட்டுவதால் நாம் இழப்பவையை விட மற்ற உயிரினங்கள் இழப்பவை மிக அதிகம்.
எங்கள் வீட்டின் அருகில் ஒரு பெரிய அரசமரம் இருந்தது. என் பள்ளி, கல்லூரி நாட்களில் தினமும் அந்த மரத்துடன் பேசாமல் இருந்த நாட்களே இல்லை. காலையிலும் மாலையிலும் அந்த மரத்தை இல்லமாக கொண்ட பல பறவைகளின் இனிமையான இரைச்சல் செவி வழியே நம்மை திகட்ட வைக்கும்,. நான் பல முடிவுகளை அந்த மரத்திடம் கேட்டு முடிவு செய்துள்ளேன், அந்த நினைவுகள் நீங்காதவை மனதை விட்டு. பல புகைப்படங்கள் அதோடு நான் எடுத்துள்ளேன். பல நூறு உயிர்களுக்கு இருப்பிடமான அந்த மரம் எனக்கும் உற்ற நண்பன்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து கட்டுரைகள் எழுதவில்லை காரணம் வெண்முரசு என்ற மாபெரும் வேள்வியை செய்து வருகிறேன் ,இருபத்தி ஆறு புத்தகங்கள், இருபத்தி ஆறாயிரம் பக்கங்களுக்கும் மேல் வாசித்து முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகும் என நினைக்கிறேன் , ஐந்து புத்தகங்கள் நிறைவு பெற்றது, ஆறாவது புத்தகத்திற்கு முன் இதை வாசித்தேன். அதை பற்றி தனியாக ஒரு தொகுப்பு எழுதுகிறேன் விரைவில் .
Comments
Post a Comment